நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுவாமி திருக்கல்யாண விழா புதன்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, நாமகிரி தாயார் சன்னதி, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி, அரங்கநாதர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் பங்குனி திருத்தேரோட்ட பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான தேரோட்ட விழா, கடந்த 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா புதன்கிழமை இரவில், நரசிம்மர் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நரசிம்மர் சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடத்தி வைக்கும் வைபவம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபட்டனர். இவ்விழாவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 22-ஆம் தேதி) காலை 8.45 மணிக்கு நரசிம்மர் சுவாமி கோயில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுக்க உள்ளனர். அன்று மாலை 4.30 மணிக்கு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து
வருகின்றனர்.
தேரோட்ட விழாவையொட்டி, நாமக்கல் நகரில் காலையிலும், மாலையிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.