நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க. மற்றும் கொ.ம.தே.க. வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த 19-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் மூன்று நாள்களில் ஒரு சுயேச்சை வேட்பாளரைத் தவிர, வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் மனுத் தாக்கலுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளான, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செ.காந்திச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் பி.டி.தனகோபால் ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்கு வந்தார்.
அவரது மனு சரிபார்ப்புக்கு பின், தேர்தல் அலுவலரான ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்கள், திருமணிமுத்தாறு, ராஜவாய்க்கால் உள்ளிட்டவை சீரமைப்பு, முட்டைகளுக்கான ஏற்றுமதி மண்டலம், லாரி, ரிக் தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு என்னுடைய பணிகளைச் செய்வேன். தி.மு.க. தேர்தல் அறிக்கை கொ.ம.தே.க.வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரும் என்றார்.
அ.தி.மு.க. வேட்பாளர் மனுத் தாக்கல்: அ.தி.மு.க. வேட்பாளர் டி.எல்.எஸ். பி.காளியப்பன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, சி.சந்திரசேகரன் ஆகியோருடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வேட்பாளருக்கு ஆதரவாக பி.ஆர்.சுந்தரம் பேசியது: கடந்த முறை அ.தி.மு.க. 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கடந்த ஐந்து ஆண்டில், சென்னை - பழனி ரயில் உள்பட 6 ரயில் இயக்கம், திருச்செங்கோட்டில் வருமான வரி அலுவலகம், ராசிபுரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம், ஏராளமான மத்திய அரசு திட்டங்களை நான் செயல்படுத்தியுள்ளேன் என்றார்.
அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன் மனு தாக்கல் செய்ய வந்தபோது, அவருடன் வந்த அமைச்சர் பி.தங்கமணி, ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டார். இந் நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்து விட்டு வந்த கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை சந்தித்து அமைச்சர் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பனுக்கு மாற்று வேட்பாளராக, அவரது மகன் பி.கே.ராஜா (37) மனுத் தாக்கல் செய்தார். கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜூக்கு மாற்றாக, அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார்.