தம்மம்பட்டிக்கு மருத்துவ குணம் மிகுந்த நார்த்தங்காய்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன.
தம்மம்பட்டிக்கு தினந்தோறும்,அருகிலுள்ள நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியிலிருந்து நார்த்தங்காய்கள் விற்பனைக்கு அதிகளவில் வருகின்றன.அதேபோல், தம்மம்பட்டி அருகே, கொல்லிமலையின் இன்னொரு அடிவாரமான முள்ளுக்குறிச்சிக்கும் அதிகளவில் நார்த்தங்காய்கள் வருகின்றன.
கொல்லிமலை ஊர்களான குண்டனி, வேலிக்காடு, கீரைக்காடு உள்ளிட்ட 50-க்கும் மேலான ஊர்களில் மலைவாழ் மக்கள் தங்கள் விவசாய நிலங்களில் வைத்துள்ள நார்த்தங்காய் குறுமரங்களில் தற்போது ஏராளமான அளவில் நார்த்தங்காய் காய்த்துள்ளன. இவைகளை விற்பனை செய்ய வியாபார மையமாக இருக்கும் தம்மம்பட்டி பகுதிகளுக்கு கொண்டுவருகின்றனர். கொல்லிமலைப் பகுதியிலிருந்து நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் 1,200 வரை நார்த்தங்காய்கள் விற்பனைக்கு வருகின்றன.
இதுகுறித்து நார்த்தங்காய்களை விரும்பி வாங்கிச் செல்வோர் கூறியது: நார்த்தாங்காய்கள் உள்கொள்வதால் வயிற்றுப் புழுக்கள் அழியும்.இதன் சாறை அருந்தி வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். தாகம் தீறும், ரத்தம் சுத்தமடையும், பசி அதிகரிக்கும். இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட நார்த்தங்காய், இங்கு குறைந்த விலையில் கிடைக்கின்றன என்றனர்.