சிறுமி ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்: செ.கு. தமிழரசன் கோரிக்கை

வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு 5 ஏக்கர் நிலமும், நிரந்தர அரசுப் பணியும்

வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு 5 ஏக்கர் நிலமும், நிரந்தர அரசுப் பணியும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அவரை  கொலை செய்த தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் ராஜலட்சுமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் ஆறுதல் தெரிவித்தார். 
இதைத்தொடர்ந்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் சிறுமி ராஜலட்சுமி வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தொடர்புடைய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
மேலும், அவருக்குப் பின்னால் சதித்திட்டம் தீட்டிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு தரிசு நிலத்தில் இருந்து 5 ஏக்கர் நிலம் வழங்க முன்வர வேண்டும். அவரின் குடும்பத்தினருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும். மேலும் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ராஜலட்சுமியை ஒருவர் மட்டுமே கொலை செய்தாரா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. தினேஷ்குமாரை இயக்கியது யார், வேறு ஏதாவது சக்திகள் பின்னணியில் இருக்கின்றதா என்பதை தகுந்த முறையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும். ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு அரசு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com