ஓமலூரில் குடிநீர் வழங்கக்கோரி முதல்வர் செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூரில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 5-ஆவது வார்டு அம்பேத்கர் நகரில் மட்டும் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதிக்கு கடந்த ஓராண்டாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருவதாகவும் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் குடிநீர் வழங்கக் கோரி, முதல்வர் எடப்பாடிகே. பழனிசாமி செல்ல இருந்த மேட்டூர் சாலையில் பொதுமக்கள் அமர்ந்தனர். அப்போது விரைந்து வந்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸார், பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தினார். இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகளை வரவழைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அனைவரையும் சாலையோரமாக அழைத்து சென்று குறைகளைக் கேட்டறிந்தனர். இதையடுத்து குறைகளை தீர்க்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.