நீதிமன்ற வழக்குகள் முடிந்தவுடன் 8 வழிச் சாலை பணி தொடங்கும்: முதல்வர் உறுதி

சேலம்- சென்னை இடையேயான 8 வழிச் சாலை பணி நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தார்.


சேலம்- சென்னை இடையேயான 8 வழிச் சாலை பணி நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தார்.
சேலம் மாநகர் இரும்பாலை சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் உள்ளிட்ட ரூ.30.21 கோடி மதிப்பிலான 30 முடிவுற்ற திட்ட பணிகள் தொடக்க விழா, ரூ.44.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 538 பயனாளிகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழாவில் பணிகளைத் தொடக்கிவைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியது:-
சேலம் வளர்ந்து வருகிற மாநகரமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்கவும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தேன்.
இதையடுத்து ஐந்து சாலை, ஏ.வி.ஆர். ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர், மணல்மேடு, பழைய சூரமங்கலம், முள்ளுவாடி போன்ற இடங்களில் உயர்மட்ட மேம்பாலம், கீழ்பாலம் கட்ட ஆணையிடப்பட்டது.
இதில் ஐந்து சாலை மேம்பால பணி நடைபெற்று வருகிறது. மற்ற பாலங்களான திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா, மற்றும் ஏ.வி.ஆர். ரவுண்டானா மேம்பால பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இரும்பாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உயர்மட்ட பாலம் கட்ட அடிக்கல் நாட்டி 5 மாதங்களிலேயே சுமார் ரூ.22 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எந்தளவுக்கு விரைவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் பாலமே சான்றாகும்.
மேலும், சேலம் - இளம்பிள்ளை பிரிவில் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்படும்.
அரியானூர் பிரிவு, மகுடஞ்சாவடி ஆகிய இரு இடங்களில் பாலம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டு 5 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும்.
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்தோம். பலர் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கின்றனர். நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு அந்தப் பணியும் தொடங்கும்.
எதிர்க்கட்சியினரின் தவறான விமர்சனம்: சிலர் முதல்வரின் ஊர் சேலமாக இருப்பதால் எட்டு வழிச்சாலை அமைக்கிறார் என்றும், சேலத்துக்கும் மட்டும் எட்டு வழிச்சாலை அமைப்பது போல தவறான கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் எட்டு வழிச் சாலை பல்வேறு ஊர்களில் இருந்து சேலம் வழியாகச் சென்னைக்குச் செல்கிறதே தவிர, வேறு ஒரு காரணமும் இல்லை. எதிர்க்கட்சியினர் ஒரு தவறான விமர்சனத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை, கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினால் சாலைகளின் தேவையும் அதிகரிக்கிறது. எட்டு வழிச்சாலை அமைப்பதால் கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் தூரம் மீதமாகிறது. மேலும், எரிபொருள் தேவையும் குறைகிறது.
சாலைகள் கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான், புதிய தொழிற்சாலைகள் வரும் சூழல் ஏற்படும். அதன் மூலம் வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் மேம்படும். நல்ல திட்டங்கள் வரும்பொழுது வரவேற்க வேண்டும். பொதுமக்கள் தாங்களாக முன்வந்து அரசுக்கு உதவ வேண்டும். எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின்போது, டி.ஆர்.பாலு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, கிட்டத்தட்ட 700 கிலோமீட்டருக்கு மேல் இந்திய தேசிய நெடுஞ்சாலை மூலம் ஆணையம் சாலை அமைக்கப்பட்டது. அப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படவில்லையா?
புதிய திட்டம் வரும்போது அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று சொல்லி ஒரு சிலர் தூண்டி விடுகிறார்கள். எனவே, எட்டு வழிச்சாலைத் திட்டம் மிக அவசியமாகும்.
குடிநீர் பிரச்னையே இல்லை என்ற நிலை உருவாக்க...:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் குடிநீர் பிரச்னையே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் எல்லாம் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
சேலம் மாவட்டத்தில் தினம்தோறும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக ரூ.110 கோடி ஒதுக்கி, பழைய குழாய்களையெல்லாம் மாற்றியமைத்து தங்கு தடையில்லாமல் காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது: அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து அரசு நிறைவேற்றி வருகிறது. பணிக்குச் செல்கிற மகளிருக்கு மானிய விலையிலே இருசக்கர வாகனங்களை அரசு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எப்படி விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ அதேபோல இந்த அரசும் விலைவாசி உயராமல் ஏழை, எளிய மக்களை பாதுகாத்து வருகிறது.
விவசாயிகளின் நலனுக்காக...: வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர் வழங்கப்படுகிறது. கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் மூலமாக விவசாயிகள் செய்கிற விளைச்சலை பெருக்கவேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதேபோல, பால் உற்பத்தியில் தன்னிறைவை பெற்றிருக்கிறோம், அந்தளவுக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவி செய்து கொண்டிருக்கிறது. ஏழை, எளிய, சிறு, குறு விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கியுள்ளதன் மூலம் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் வாழ்கின்ற விவசாய பெண் தொழிலாளர்களுக்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் கோழிகள், கோழிக்குஞ்சுகள் வழங்கியுள்ளோம்.
கிராமப்புற காய்கறி வளர்ப்புத் திட்டத்தை உருவாக்குவதற்காகத் திட்டம் தீட்டி, மக்களுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் பயிரிட தேவையான விதைகளை வழங்கியுள்ளோம் என்றார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், ராஜா, மருதமுத்து, சித்ரா, மனோன்மணி, முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com