கொளத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்த பேருந்து ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தப்பாடி குள்ளவீரன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது ஆன மகள் 8-ஆம் வகுப்புவரை படித்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் ஆலைக்கு நிர்வாகம் அனுப்பும் பேருந்தில் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி வீட்டிலிருந்த சிறுமியை காணவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை சிறுமியும், வேலைக்கு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்த குணசேகரன் (24) என்பவரும் சிறுமியின் வீட்டுக்கு வந்தனர். தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர்.
ஆனால் இருவரையும் சிறுமியின் தந்தை மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் அளித்த புகாரில் தனது மகளை குணசேகரன் ஆசைவார்த்தைகள் கூறி கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் மேட்டூர் அணை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து குணசேகரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.