சங்ககிரி அருகே உள்ள தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்று ஓசூரில் மண்டல அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களை பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினர்.
சங்ககிரி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் 100 மீ. ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வி.தெய்வப்பிரியா முதலிடமும், 3 ஆயிரம் மீ. ஓட்டப்பந்தயத்தில் ஏ.பிரியா 2-ஆவது இடத்திலும், 19 வயதுக்குள்பட்ட தொடர் ஓட்டப் பந்தயத்தில் வி.தெய்வப்பிரியா, சி.அபிராமி, எம்.சென்னம்மாள், கே.கோகிலா ஆகியோர் 3-ஆவது இடத்திலும் வெற்றிபெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவியர் ஓசூரில் மண்டல அளவில் அக். 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றிபெற்ற மாணவியருக்கு பள்ளியின் புரவலர் பத்மா வெங்கடாஜலம் ரொக்கப் பரிசு வழங்கிக் கௌரவித்தார். பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் வி.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழத்தின் சார்பில் துணைத் தலைவர் கண்ணன் மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். இணைச் செயலர் செந்தில்குமார், நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.