முதிர்வு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப் பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையுடன் பிஏசிஎல் நிறுவனம் ஜூலை 2013 வரை செயல்பட்டது. அதன் பின் ஏற்பட்ட பிரச்னைகளால் உச்ச நீதிமன்ற வழக்குக்கு உள்ளாகி தீர்வு கண்டது.
அதில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி ஒன்றை நிறுவி அதன்மூலம் நிறுவனத்தின் சொத்துகளை விற்று பணமாக்கி முதலீட்டாளர்கள் முதிர்வு தொகையை 6 மாத காலத்துக்குள் வழங்க 2016-இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தங்களின் சேமிப்பை இழந்த முதலீட்டாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க பலகட்டப் போராட்டங்களை நடத்திவந்தனர்.
இப்பிரச்னையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிஐடியு மாநில துணைத் தலைவர் டி.உதயகுமார் தலைமையில் சேலம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, காவல் துறையினர் ரயில் நிலையத்தின் முகப்பில் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். பின் அங்கு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் பி.ராம மூர்த்தி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி உள்ளிட்ட பிஏசிஎல் நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் பேசினர். இதில் பிஏசிஎல் ராஜமாணிக்கம், விஸ்வநாதன், உள்ளிட்ட சங்க செயலர் கே.சிவானந்தம், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதையடுத்து சுமார் 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.