சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே அ.தாழையூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (19), ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் பிரவீண்குமார் (19) ஆகியோர் குமாரபாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் முதலாமாண்டு பயின்று வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் செல்லிடப்பேசி வாங்குவதற்காக தன்னுடன் பயிலும் நண்பரின் இரு சக்கர வாகனத்தில் சேலத்துக்கு வந்துள்ளனர். இதையடுத்து, செல்லிடப் பேசியை வாங்கிக் கொண்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மகுடஞ்சாவடி அருகே உள்ள அ.தாழையூர் பகுதியில் சென்றபோது, அவர்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவர்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.