ஓமலூரில் மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ குட்கா, பான்மசாலா மற்றும் நிகோடின் புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஓமலூர் ஊமை மாரியம்மன் கோயில் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் மளிகைக் கடைகள் நடத்தி வருகின்றனர். இந் நிலையில், பாடுசிங் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடை மற்றும் குடோனில் குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஊமை மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள பாடுசிங் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுள்ள பான்பராக், ஹான்ஸ், குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம். அதைத் தொடர்ந்து, கடையின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன், தகவலின் பேரில் ஓமலூர் பகுதியில் சோதனை நடத்தினோம். இங்குள்ள மளிகைக் கடையில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், இதுபோன்று தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பதாக பொதுமக்களுக்கு தெரிந்தால் உணவுப் பாதுகாப்பு துறையின் கட்செவி அஞ்சல் எண்ணான 9444042322-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.