கெங்கவல்லியில் வீடுகட்ட பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை பெற்றுத் தரக் கோரி, பாதிக்கப்பட்டோர் கெங்கவல்லி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி. இவர் சேலத்திலுள்ள தொண்டு நிறுவனம் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இலவசமாக வீடுகட்டித் தருவதாகவும், அதற்காக ஒவ்வொருவரும் தலா ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை பதிவுக் கட்டணமாக தரவேண்டும் என்று கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோரிடம் வசூல் செய்துள்ளார். ஆனால், அவர் கூறியபடி வீடுகட்ட பணம் தரவில்லையாம்.
இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார், இந்த வழக்கை சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றினர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வையாபுரி கூறிய தொண்டு நிறுவனம், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்தது. அதில், வரும் 120 நாள்களில் பொதுமக்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால், அந்த தொண்டு நிறுவனம் பணத்தை திருப்பித் தரவில்லையாம்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஞாயிற்றுக்கிழமை கெங்கவல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, வையாபுரி தங்களிடம் பெற்ற பணத்தை உடனடியாகத் திருப்பித் தரவேண்டும் என்றும், இல்லையேல் வையாபுரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி புகார் மனு அளித்தனர்.
அதேபோல் வையாபுரியும், பொதுமக்கள் தன்னை பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர் என்று தனது தரப்பில் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இருதரப்பு புகார் குறித்தும் கெங்கவல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.