ஏத்தாப்பூரில் தானியங்கி விதை வழங்கும் இயந்திரம் பழுது: விவசாயிகள் அவதி
வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மைய வளாகத்திலுள்ள தானியங்கி விதை வழங்கும் இயந்திரம் முறையாக இயங்குவதில்லை.
விதைக்காக போடும் பணத்தை விழுங்குவதால் இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
இதனால், விலைபோகாமல் இயந்திரத்திலுள்ள விதைகள் இரு மாதத்திற்குள் காலாவதி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏத்தாப்பூர் பேரூராட்சியில் கோயமுத்துôர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் உள்ளது. வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் நலன் கருதி, ஆராய்ச்சி மையத்தின் நுழைவு வாயிலில் இரு ஆண்டுக்கு முன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தானியங்கி விதை வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது.
இந்த இயந்திரத்தில் பத்து ரூபாய் தாளை உள் செலுத்தினால், கத்திரி, தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் கீரை விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த இயந்திரம் முறையாக இயங்கவில்லை. அதனால் விதைக்கான எண்ணை தேர்வு செய்து பத்து ரூபாய் தாளை இயந்திரத்திற்குள் வைத்தால் பணத்தை விழுங்கும் இயந்திரம் விதைகளை வெளியிடுவதில்லை.
இயந்திரத்திற்குள் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான விதைகள் பிப்ரவரி மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்டு மே மாதம் பாக்கெட்டில் அடைக்கப்பட்டவைகளாக உள்ளன. இந்த விதை பாக்கெட்டுகள் வரும் நவம்பர் மாதத்தில் காலாவதியாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, முறையாக இயங்காத தானியங்கி விதை வழங்கும் இயந்திரத்தை பழுதுநீக்க ஆராய்ச்சி மைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.