ஓமலூர் அருகே மூன்று இளைஞர்கள் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த சம்பவத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
தாத்தியம்பட்டி கிராமத்தில் இருந்து திங்கள்கிழமை கல்லூரி செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற மாணவியை இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் கிண்டல் செய்தனர். அப்போது அங்கிருந்த கிராம மக்கள் அந்த மாணவியிடம் விசாரித்தபோது நடந்ததை மாணவி கூறியுள்ளார்.
இதனால் 3 இளைஞர்களையும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து மூன்று இளைஞர்களின் உறவினர்கள் நிகழ்விடம் வந்து பொதுமக்களைத் தாக்கினர். இருதரப்பும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் மோதல் ஏற்பட்டது.
காயமடைந்த இரு தரப்பினரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் கல்லூரி மாணவிக்குத் தொல்லை கொடுத்த கட்டிக்காரனூர் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார், தங்கதுரை,அண்ணாமலை ஆகியோர் மீதும், மூவரையும் தாக்கியதாகக் கூறி காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை உள்ளிட்ட மூவர் மீதும் ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.