பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி உள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக கட்சியின் சேலம் மண்டலக் கூட்டம் அயோத்தியாபட்டணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பச்சமுத்து செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம்-சென்னை எட்டுவழி பசுமை சாலை திட்டம் கொண்டு வரப்படுவதால், வேலைவாய்ப்பு பெருகும். தனி மனிதனால் செய்ய முடியாத திட்டங்களைதான் அரசு செய்து கொடுக்க வேண்டும்.
மாறாக, இலவச பொருள்களை கொடுத்து அவர்களை உழைக்க முடியாதபடி செய்யக் கூடாது. மேலும், வரைமுறை மீறி யார் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கதாகும்.
நாட்டில் ஊழல் பெருகிவிட்டது. ஊழல் என்பது தவறானதல்ல என்று நினைக்கும் அளவுக்கு மாற்றிவிட்டனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்கிறோம். இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கையும், பாஜகவின் கொள்கையும் ஒரே நிலையில் இருப்பதால், அங்கு இருக்கிறோம்.
நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம். அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் அரசியல் வாழ்க்கையை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
பேட்டியின்போது கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலர் ராஜேந்திரன், துணை பொதுச் செயலர்கள் லட்சுமணன், இளைஞரணி செயலர் வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.