ஊதியம் வழங்கப்படாததால், மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் துப்புரவுப் பணிக்கு போதிய நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. இதனால், துப்புரவுப் பணி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகைதாரரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில், உரிய காலத்தில் பணியாளர்களுக்கு குத்தகைதாரர் ஊதியம் வழங்கவில்லை என்று கூறி, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், துப்புரவுப் பணிகள் முடங்கிவருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், 2 மாத ஊதியம் வழங்கப்படாததால், துப்புரவுப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் துப்புரவுப் பணி முடங்கி குப்பைகள் வாரப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.
இந்தப் பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.