மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 98 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாகச் சரிந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 42 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 83 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 98 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, அணையின் நீர் மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 53.98 அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நீர் இருப்பு 20.41 டி.எம்.சி.யாக இருந்தது.