கெங்கவல்லி வட்டத்தில் வீரகனூர், தம்மம்பட்டி,கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில், வாழை, பாக்கு மரங்கள் சேதம் அடைந்தன.
பலத்த மழையால், கெங்கவல்லி ( வடக்கு ) காட்டுக்கொட்டாய் பகுதியில் காளிதாஸின் கூரை வீடு உள்ளிட்ட 2 பேரின் கூரைவீடுகளின் சுவர்கள் இடிந்துவிழுந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் தகவல்களைச் சேகரித்து, வருவாய்த் துறைக்குத் தகவல் அனுப்பினார்.
கடம்பூரில் ஒருவரது கூரைவீட்டின் மேற்கூரை, சூறைக்காற்றில் அடித்து சென்றுவிட்டது.
கூடமலை பகுதியில் வீசிய சூறைக்காற்றாலும் மழையாலும் பல ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள பாக்கு மரங்கள், அதிக அளவில் வாழை மரங்கள் சேதமடைந்தன.
இதேபோல், கெங்கவல்லி வட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்தமழையால் விவசாய பயிர்கள் முற்றிலும் சேதமாகியுள்ளன.
மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வட்டாட்சியர் சுந்தரராஜன் தலைமையிலான வருவாய்த்துறையினர் கணக்கெடுத்துவருகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறியது:-
29 வாழைத்தோப்புகளில், தலா ஆயிரம் வாழைமரங்கள் வீதம் 29 ஆயிரம் வாழைமரங்கள் சாய்ந்துவிட்டன. மேலும் மொத்தமாக 6 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பாக்குமரங்கள் முழுவதும் சாய்ந்துவிட்டன என்றார்.