அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒளிரும் டிஜிட்டல் பலகை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சேலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப்புடன் சேலம் மாநகர காவல் துறையினர் இணைந்து அனைத்து மாநகர காவல் நிலையங்களிலும் டிஜிட்டல் பெயர் பலகைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் அமைக்கப்படவுள்ள இந்த டிஜிட்டல் பலகையில் சாலை பாதுகாப்பு குறித்தும், கணினிசார் குற்றப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தான வாசகங்கள் மற்றும் மாநகர காவல் துறையின் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் மக்கள் பயன்பாட்டுக்காக ஒளிரும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து அஸ்தம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பி. தங்கதுரை டிஜிட்டல் பலகையைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் குற்றம் மற்றும் போக்குவரத்து மாநகர காவல் துணை ஆணையர் சி. சியாமளாதேவி, நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் என். பாலசுப்பிரமணியன் மற்றும் சேலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் சூரியநாராயணன், செயலாளர் கணேஷ்பாபு, திட்டத் தலைவர் அருள்முருகன், லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.