ஆத்தூர் 33-ஆவது வார்டில் புதிய நியாய விலைக் கடைக்கு ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி திங்கள்கிழமை பூமிபூஜை செய்து வைத்தார்.
ஆத்தூர் 33-ஆவது வார்டு கண்ணாடி மில் அருகில் நியாயவிலைக் கடைக்கு இடம் இல்லாமல் மாற்றுக் கடைக்கு பொதுமக்கள் அதிக தூரம் சென்று பொருள்கள் வாங்கி வந்தனர்.
ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதே பகுதியில் இடம் தேர்வு செய்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் கடையைக் கட்டிக் கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அந்தப் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூமிபூஜை செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் நகரச் செயலாளர் அ. மோகன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, அப் பகுதியின் கிளைச் செயலாளர் டி. சண்முகம், வெங்கடேஸ்வரா ஏஜென்ஸி மணி, முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.