வாழப்பாடி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மறியலில் ஈடுபட்ட 53 பேர் மீது வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், காவேரி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் மணிகண்டன் (21). கோவையில் ஒரு தனியார் கல்லூரி மாணவரான இவர், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி அருகில் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், ஆவேசமடைந்த மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் கிராம மக்கள், அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தடுக்க மேம்பாலமும், மின்விளக்குகளும் அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் மறியலில் ஈடுபட்டதோடு, விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடலை போலீஸார் கைப்பற்ற விடாமல் தடுத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் (35), மணி (34), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி கோபால கிருஷ்ணன் (52) மற்றும் அடையாளம் தெரிந்த 50 பேர் உள்பட மொத்தம் 53 பேர் மீது, மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி, வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸார் 53 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.