பொய் வழக்கில் 9 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திட கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த வாழப்பாடி கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி ஷர்மினா. வழக்குத் தொடர்பாக கடந்த பிப்ரவரி 5 -இல் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ரவுண்டானா சிக்னல் அருகே வந்த தண்டபாணியை காரிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அவர் மீது வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகத் தெரிகிறது. மேலும் அவருடன் வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த ஜெகன், கண்ணன், ரமேஷ், சரவணன், கருணாகரன், தினேஷ், பிரபாகரன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதில் கைதான அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க காரிப்பட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்த வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
இதுதொடர்பாக ஷர்மினா உள்ளிட்டோர் கூறியது: எங்கள் பகுதியைச் சேர்ந்த 9 பேரை பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் அடைக்க காரிப்பட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருப்பதால் சிரமத்தில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் கருதி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுத்து நிறுத்திட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றார்.