ஏற்காட்டுக்கு இந்த ஆண்டு வெளிமாநில பறவைகள் அதிகம் வந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பேர்ட் கவுன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பறவைகள் பற்றி தன்னார்வலர்கள் மூலம் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் 18 வரை நான்கு நாள்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. முண்டகம்பாடி, கொட்டச்சேடு, செங்காடு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் 82 பறவைகளில் 7 பறவைகள் வெளிமாநில பறவைகள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பெரிப் பூங்குருவி ,நீலத்தலை பூங்குருவி, நீல பூங்குருவி, செஸ்ட் நட் டெய்ல்ட் பூங்குருவி, காட்டு வாலாட்டி குருவிகள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்து செல்வதாக கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அதன் புகைப்படங்களை பேர்ட் கவுன்ட் ஆப் இந்தியா இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், பழப்பு கிச்சான் குருவி அந்தமான், இலங்கையிலிருந்து வருவதாகவும், கடம்பலகன் குருவிகள் பார்த்தீனிய பூக்களை விரும்பி உண்பதாகவும் தெரிவித்தனர்.