தமிழக அரசு மருத்துவமனைகளில் மார்ச் 4-ஆம் தேதிக்குள் புதிதாக 1,300 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அவர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் வழங்கவுள்ளார் என்றும் அமைச்சர் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தெரிவித்தார்.
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் டயாலிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவு திறப்பு விழா சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த மருத்துவமனை மையத்துக்கு 5 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 2 நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும், 3 தமிழக அரசும் நிதியிலும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் சுத்திகரிப்பு மையம் இதுவரை 750 இடங்களில் திறந்துள்ளோம்.
தனியார் மருத்துவமனைக்கு நிகராக சேலம் அரசு மருத்துவமனையில் ரூ. 6 கோடி செலவிலான புதிய கட்டடத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ரூ. 18 கோடி மதிப்பிலான நவீன கருவிகளுடன் விரைவில் திறக்கப்படும். தமிழக முதல்வர் அதைத் திறந்து வைப்பார்.
மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றிட தமிழக முதல்வர் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
வரும் மார்ச் 4-ஆம் தேதிக்குள் அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவர்களாக 1,300 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் வழங்கவுள்ளார் என்றார் அமைச்சர்.
அவருடன் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர். இளங்கோவன், கள்ளக்குறிச்சி எம்.பி. க. காமராஜ், எம்எல்ஏ-க்கள் ஆர்.எம். சின்னதம்பி, அ. மருதமுத்து, நகரச் செயலாளர் அ. மோகன், ஒன்றியச் செயலாளர் சி. ரஞ்சித்குமார், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, சுகாதாரத் துறை இணை இயக்குநர் வி. சத்யா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கே. திருமால்பாபு, ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொ) கே. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.