ஏற்காடு மலைப் பாதையில் சனிக்கிழமை வனப் பகுதியில் உள்ள மரங்களில் தீப்பிடித்ததால் மூங்கில், பல்வேறு மரங்கள் சாம்பலாகின.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வனப் பகுதிகளில் இலைகள் உதிர்ந்து காணப்படுவதால் காட்டுத் தீ ஏற்பட்டது.
வனக் காவலர், வன ஊழியருக்குப் போதுமான தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாததால் ஆண்டுதோறும் வனப் பகுதிகள் நாசமாகி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ளதுபோல் தீத்தடுப்பு வான் வழி வாகனங்கள் இல்லாததால் வனப் பகுதியை தீயிலிருந்து பாதுகாப்பதில் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும் காட்டுத் தீயில் வன ஊழியர்களின் உயிர்களுக்கு ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வனப் பகுதிகளைப் பாதுகாக்க பொதுமக்கள், வனம் சார்ந்த கிராம மக்கள், மலைப் பாதைகளில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வனத் துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.