மேட்டூர் அருகே மயானம் கேட்டு சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அருகே நங்கவள்ளி பேரூராட்சியில் உள்ளது பாசக்குட்டை. இங்கு நூறு குடியிருப்புகள் உள்ளன. சுமார் 250 பேர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை நங்கவள்ளி மேட்டூர் சாலையின் ஓரம் அடக்கம் செய்து வந்தனர்.
தற்போது சாலையை அகலப்படுத்தவும், சிறு பாலம் அமைக்கவும் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும், நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்திக் கொண்டது.
இதனால் தங்களுக்கு மயானம் தேவை என்று அரசு அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை இரவு தில்லி முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராமசாமி (90) என்பவர் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார்.
அவரது சடலத்தை அடக்கம் செய்ய மயானம் தேவை எனக் கோரி சனிக்கிழமை நங்கவள்ளி, மேட்டூர் சாலையில் அப் பகுதி மக்கள் சாலையின் நடுவே சாமியானா பந்தல் அமைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இவ் வழியாக வரும் வாகனங்கள் வனவாசி வழியாகத் திருப்பி விடப்பட்டன.
ஓமலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மேட்டூர் வட்டாட்சியர் அறிவுடை நம்பி ஆகியோர் போராட்டகாரர்களுடன் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.