தமிழக மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் முடிவில் தெரியும் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக- பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். மாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து கொடுக்க வேண்டியது காவல் துறையின் முக்கியமான பொறுப்பு.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்ற விஷயங்கள் குறித்தும் மக்கள் பாதிக்கப்படுகிற விஷயங்கள் குறித்தும் கவலையோடு போராடுகிறவர் முகிலன்.
அவருக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தது என்றால் அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை சரியாக செயல்பட்டு முகிலனை கண்டுபிடிக்க வேண்டும்.
அதேபோல 7 தமிழர்களை விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் இருக்கும் அத்தனை பேரின் கருத்தாக உள்ளது. அதனால் தமிழக அரசு ஆளுநரிடம் உரிய முறையில் பேசி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரம் தாழ்ந்து விமர்சித்தார். அவருடன் அதிமுக கூட்டணி வைத்ததை தொண்டர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். 95 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.
அமமுக கட்சி 38 தொகுதியில் போட்டியிட உள்ளோம். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத தேர்தல் என்பதால் முந்தைய காலக் கணக்குகளை வைத்து எதுவும் கூற முடியாது.
எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இணைந்துள்ளது. இக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமமுக கட்சி 38 தொகுதியில் போட்டியிட உள்ளோம். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் தயாராக உள்ளனர்.
அமமுக தலைமையிலான கூட்டணியே முதன்மை கூட்டணி. தமிழக மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் முடிவில் தெரியும். தமிழகம் முழுவதும் ஆர்.கே. நகர் அலைவீசும் என்றார்.