ஆத்தூரை மாவட்டமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளப் பிள்ளையார் கோயிலில் ஆத்தூரை மாவட்டமாக்க வேண்டுமென பொதுமக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். முன்னதாக முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டம் எஸ்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் லோட்டஸ் ஜோ வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜெ.ஸ்டாலின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராஜா, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ரவி, பிரமுகர்கள் அர்த்தனாரி, தேமுதிக நகரச் செயலர் வி.எஸ்.
சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஆத்தூரை மாவட்டமாக்க அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆகையால் தமிழக அரசு ஆத்தூரை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, ஊர்வலமாக ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கோட்டாட்சியர் உதவியாளரிடம் அளித்தனர்.