சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில், நிகழாண்டு மார்கழி மாத பஜனை நிறைவு சிறப்பு பூஜைகள் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் அருள்மிகு சோமேஸ்வரர் சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் குழுவினர் சார்பில், கடந்த டிச. 16-ஆம் தேதி (மார்கழி முதல் நாள்) தொடங்கி ஜன. 14-ஆம் தேதி வரை (மார்கழி 30-ஆம் நாள்) வரை தினசரி அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராண பாடல்களை பாடி சுவாமிகளை பக்தர்கள் வழிபட்டனர்.
அதனையடுத்து, மார்கழி மாத பஜனை நிறைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை கோயில் தூய்மைப்படுத்தப்பட்டு, கோயில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. இதனையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையையொட்டி, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் விழாக் குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தில்லை விநாயகர் கோயிலில்... சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே தெலுங்கர் வீதியில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் கோயிலில் மார்கழி மாத நிறைவு நாளையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.