சேலம் அருகே குடிநீர் முறையாக வழங்கிட வலியுறுத்தி காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இடங்கண சாலை தூதனூர் நா.பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனர்.
அவர்களை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பெண்கள் தங்களை மனு அளிக்க உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெண்களை ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட 2 ஆவது வார்டு தூதனூர் நாப்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர்த் தொட்டிக்கு இருப்பாளி கூட்டு குடிநீர்த் திட்டத்தில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பேரூராட்சியின் அனுமதியை மீறி ஆளும் கட்சியினர் சிலர் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு எடுத்துள்ளனர். இதனால், தொட்டிக்கு சரிவர தண்ணீர் செல்லாமல் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.
இதனால் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். மேலும் குடிநீருக்காக 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, முறையற்ற இணைப்புகளை அகற்றி முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றனர்.