சேலத்தில் கொலை வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
அம்மாப்பேட்டை பிரதான சாலை நகர கூட்டுறவு வங்கி அருகே தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணமூர்த்தி (33), வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2016 நவம்பர் 12-ஆம் தேதி வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (55), அதிக வாடகை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, வீட்டில் குடியிருந்த கிருஷ்ணமூர்த்தியை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வீட்டில் குடியிருந்த கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிந்து வீட்டு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில், சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 2-இல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.