மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கொளத்தூர் ஒன்றிய பால் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேட்டூரைஅடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மோளப்பொறையூர் கிராமம். இங்குள்ள மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 8 இயக்குநர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக பால் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் தலைவரையும், செயலரையும் தீர்மானம் மூலம் நீக்கம் செய்துள்ளனராம். இதனால், கடந்த 3 மாதங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான நிலுவைத் தொகை சுமார் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படவில்லையாம். கால்நடைகளுக்கு தீவனமும் வழங்கப்படாததால், கறவை மாடுகளுக்கு தீவனம் வழங்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனராம். மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு காணப்படவில்லையாம். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கால்நடைகளுடன் கூட்டுறவு சங்கத்தின் முன் கூடி எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் முறைப்படி தேர்வு செய்யப்படாத தற்போதுள்ள இயக்குநர்களை நீக்கி, முறையான தேர்தல் நடத்தி புதிய நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.