நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒரு வாக்காளர் யாருக்கு வாக்கு அளித்தார் என்பதை உறுதி செய்யும் கருவியை எவ்வாறு பொருத்துவது என்ற செயல்முறை விளக்கப் பயிற்சி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் உதவி அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட 124 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய 26 தேர்தல் மண்டல அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்தார்.
இதையடுத்து, மண்டல அலுவலர்கள் குழுவினராக கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாதிரி இயந்திரங்களில் காகிதங்களை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து சந்தேகங்களை பயிற்சி பெற்ற அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.