விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடியை சேர்ந்த ஐயப்பப் பக்தர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையுடன் பழனி மலைக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் தரிசன வரிசை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். ஐயப்பப் பக்தர்கள் பலரும் காவடி எடுத்து ஆடிப்பாடி வந்தனர். விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடியை சேர்ந்த ஐயப்பப் பக்தர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகையுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அந்த பதாகையில் வாழை இலையில் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும், பிளாஸ்டிக் இலை கேடு, பிளாஸ்டிக் டம்ளரில் குடிநீர், பூமித்தாய்க்கு கண்ணீர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்திருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் சரண் சபரிமலை, ராமேசுவரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும் இந்த பதாகைகளுடன் சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.