வத்தலகுண்டு வந்த ஸ்ரீஸ்ரீ வித்யா விஜய தீர்த்த சுவாமிகள் அங்குள்ள பிருந்தாவனத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்திற்கு, கர்நாடக மாநிலம் சோசலை வியாசராஜ மடத்தின் 40ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யாமனோகர தீர்த்த சுவாமிகளால் சந்தியாச ஆஸ்ரமம் அளிக்கப்பட்ட ஸ்ரீஸ்ரீ வித்யா விஜய தீர்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
அவருக்கு பிருந்தாவனத்தின் நிறுவனர் கோபிநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிருந்தாவனத்தில் சிறப்பு வழிபாடு நடத்திய ஸ்ரீஸ்ரீ வித்யா விஜய தீர்த்த சுவாமிகள், கிருஷ்ணதேவராயரின் ஆன்மீக குருவான வியாசராஜர் மற்றும் அவரது அடுத்த பிறவியான ஸ்ரீராகவேந்திரர், முற்பிறவியான பிரகலாதரின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
மேலும், ஸ்ரீராகவேந்திரர் சமாதியாகி 347 ஆண்டுகள் முடிந்தும், 700 ஆண்டுகள் வரை ஜீவனுடன் இருந்தும் அருளாசி வழங்கும் பொருட்டு வத்தலகுண்டுவில் பிருந்தாவனத்தில் குடி கொண்டுள்ளார். உண்மையான பக்தியுடன் வழிபாடு செய்தால், குருவருளால் நமக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என பக்தர்களுக்கு அருளாசி புரிந்தார்.