திண்டுக்கல் மண்டலத்தில் 65ஆவது கூட்டுறவு வார விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவ.14 முதல் 20ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது
இக் கூட்டத்துக்கு, துணைப் பதிவாளர்கள் கோ.பாலசுப்பிரமணி, டேனியல் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 65ஆவது கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் மண்டலத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் கொடி ஏற்றுதல், மரம் நடுதல், ரத்ததான முகாம், கருத்தரங்கம், உறுப்பினர் சந்திப்பு கூட்டம், விற்பனை மேளா, கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.