வத்தலகுண்டு அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்துள்ள நூத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்த தவசி மகன் முரளி (20). அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆனந்தகுமார் (21). முரளி, நிலக்கோட்டை பகுதியிலும், ஆனந்தகுமார் திருப்பூரிலும் வேலை செய்து வந்தனர். தீபாவளி பண்டிகைக்காக, திருப்பூரிலிருந்து நூத்துலாபுரத்துக்கு ஆனந்தகுமார் வந்துள்ளார்.
இந்நிலையில், வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்த தனது நண்பர் ஒருவரை அழைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஆனந்தகுமார், இருசக்கர வாகனத்தில் சென்றார். அவருடன், முரளியும் சென்றுள்ளார். வத்தலகுண்டுவை அடுத்துள்ள மல்லணம்பட்டி ஊருணி அருகே சென்றபோது, சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார், முரளி ஆகிய
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வத்தலகுண்டு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.