திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் சீனிவாசன் முன்னிலையில் தொண்டர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலர் வி.மருதராஜ் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட செயலர் வி.மருதராஜ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கீடு செய்த தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர், தங்கள் பகுதிக்கான ஒன்றிய செயலரை மாற்றக் கோரி கோஷமிட்டனர்.
இதுதொடர்பாக கூட்டத்தில் அவர்கள் கூறியதாவது:
தொப்பம்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டுறவு தேர்தலில், அதிமுக ஒன்றிய செயலரான கிட்டுச்சாமி, திமுக எம்எல்ஏ அர.சக்கரபாணிக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால், அதிமுகவினருக்கு பதவி கிடைக்காமல் போனது.
அதேபோல், அங்கன்வாடி பணியாளர் நியமனத்திலும் திமுகவினருக்கே பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், கிளைக் கழக நிர்வாகிகளால் அதிமுக தொண்டர்களை எப்படி சமாதானப்படுத்த முடியும். எனவே, ஒன்றிய செயலரை மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
இதனிடையே கூட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. நாற்காலிகளை தூக்கி வீசி கடுமையாக மோதிக் கொண்டனர். மாவட்ட செயலர் மருதராஜ், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆகியோர் தடுத்தும் மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனை அடுத்து, வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன், தொப்பம்பட்டி தொண்டர்களை கட்சி அலுவலகத்தில் வந்து சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என்றும், அல்லது மாவட்ட நிர்வாகிகளுடன் தொப்பம்பட்டிக்கே வந்து உங்களிடம் குறை கேட்கிறோம் என்று கூறியும் சமாதானப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தொப்பம்பட்டி அதிமுகவினர் கூட்டத்திலிருந்து வெளியேறினர். அமைச்சர் முன்னிலையில் அதிமுக தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம்கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.