எரியோடு அருகே பெண் வெட்டிக் கொலை: 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச்  சேர்ந்த 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச்  சேர்ந்த 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
எரியோடு  அருகேயுள்ள சொட்டமாயனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி மஞ்சுளா (45). வட்டிக்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொழில்  செய்து வந்தார். இந்நிலையில் நல்லமனார்கோட்டையை அடுத்துள்ள சிறுகண் பேருந்து நிறுத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்த மஞ்சுளாவை, மர்ம நபர்கள் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
இந்நிலையில் எரியோடு அருகேயுள்ள தொட்டணம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மல்லீஸ் முருகன்(23) என்பவர், இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில், அவரை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மதுபாலா(19), மகாமுனி மகன் குமரவடிவேலு(28), பெத்தான் என்ற பிச்சை முத்து(50), மாரிமுத்து மகன் ஐயப்பன்(18) ஆகியோரை புதன்கிழமை  கைது  செய்தனர்.
கடன் வசூலிப்பதில் மோதல்: போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு மஞ்சுளாவிடம் ரூ.20 ஆயிரத்தை கடனாக மல்லீஸ் முருகன் பெற்றுள்ளார். அதற்கு 6 மாதங்கள் வட்டிக் கொடுத்து வந்த அவர், அதன்பின்னர் வட்டிப் பணம் கொடுக்கவில்லை.
 இதனால்  மஞ்சுளா கடந்த 4 நாள்கள் முன்பு மல்லீஸ் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் மஞ்சுளாவை கொலை செய்ய திட்டமிட்ட மல்லீஸ் முருகன், வட்டிப் பணம் கொடுப்பதாக கூறி திருக்கண் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த மஞ்சுளாவை, மல்லீஸ் முருகன் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக, மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com