திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் கேளையாடு வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
கன்னிவாடி வனச்சரகத்தில் அரிய வகை மான்கள், சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், பாச்சலூரை அடுத்துள்ள சிறுவாட்டுக்காடு பகுதியில் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர், துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் சிறுவாட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் (30), பார்த்திபன் (21), கருவேலம்பட்டியைச் சேர்ந்த வேலன் (35) என்பது தெரியவந்தது.
மேலும், மூவரும் சேர்ந்து கேளையாடு வேட்டையாடியதும் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத்துறையினர், ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஹெட் லைட், கேளையாடு இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.