பழனி ஆனந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பழனி அடிவாரம் கண்பத் குழும வளாகத்தில் உள்ள இக்கோயிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை அதிகாலை நான்காம் காலபூஜை நடத்தப்பட்டது. பின்னர், புனித கலசங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மேளதாளம் முழங்க பிரதான கலசம் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 7 மணிக்கு மேல் திண்டுக்கல் சுக்காம்பட்டி சுவாமிகள் கொடியசைக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை பாலசுப்ரமண்ய சிவாச்சார்யார் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்விழாவில், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து ,முதலமடை சுனில்தாஸ் சுவாமிகள், ஆடிட்டர் வெங்கட்ரமணன், டாக்டர் சங்கர்ராமன், ஸ்தபதி விஸ்வமூர்த்தி, நிட் ரமேஷ், வழக்குரைஞர் அனிருத் கர்கா, கண்பத் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.