திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசுத் தொடக்கப் பள்ளிக்கு, கிராம மக்கள் புதன்கிழமை சீர் பொருள்கள் வழங்கினர்.
வத்தலகுண்டு அடுத்துள்ள கட்டகாமன்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 160 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்வி, விளையாட்டு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டு, மாவட்ட அளவில் விருதுகளை இப்பள்ளி பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்பள்ளிக்கு, கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சார்பில் சீர் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கட்டகாமன்பட்டி பட்டாளம்மன் கோயிலுக்கு சீர் பொருள்களை எடுத்து வந்த பொதுமக்கள், வாண வேடிக்கை, தாரை தப்பட்டை முழங்க அங்கிருந்து பள்ளியை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பழங்கள், நோட்டு புத்தகம், பென்சில், பேனா, தண்ணீர் பிடிக்கும் பானை, சில்வர் குடம், மேஜை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட பொருள்களை சீராக எடுத்து வந்தனர்.
பள்ளி வளாகத்தில், மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி, வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்தர் ராஜம், அங்கயற்கண்ணி, தலைமையாசிரியை விஜயா ஆகியோர் பொதுமக்களை வரவேற்று, சீர்பொருள்களை பெற்றுக் கொண்டனர்.