பழனி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் வியாழக்கிழமை அகற்றினர்.
பழனி பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் நகராட்சி அனுமதித்துள்ள அளவைத் தாண்டி பல அடி தூரத்திற்கு வியாபாரிகள் ஆக்கிரமிப்புகள் செய்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வியாழக்கிழமை அகற்றினர். வியாபாரிகள் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வகையில், குறிப்பிட்ட எல்லைவரை புதிதாக மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்டன. மஞ்சள் கோட்டை தாண்டி கடைகள் வெளியே வைக்கப்பட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் நாராயணன் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பொருள்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முன்னிட்டு ஏராளமான போலீஸார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.