பெண்களை இழிவுபடுத்தும் எந்தவொரு செயலிலும் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை சார்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
எல்லா சூழலிலும், நியாயத்திற்காகவே குரல் கொடுத்தவர் நீதிபதி விஆர்.கிருஷ்ணய்யர். பல பதவிகளை வகித்த போதிலும், நேர்மையின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். பெண்கள் தொடர்பான பல வழக்குகளில் தனது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளார். பெண்களின் உரிமைகளைச் சட்டபூர்வமாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழியாகப் பெற்றுத் தந்தார். குறிப்பாக, பெண் சமத்துவம், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இருந்த பாகுபாடு, விவாகரத்து, கருக்கலைப்பு, வாரிசு அடிப்படையில் பெண்களுக்கும் வேலை உரிமை, பெண் கொடுமை, பாலியல் சீண்டல்கள் தொடர்பான வழக்குகளில் பெண்களுக்குச் சாகமானத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அரசின் சட்ட திட்டங்களில் இருந்த குறைபாடுகளைத் துணிவுடன் சுட்டிக் காட்டியவர். சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து, அனைத்து மக்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். வரலாற்றில் இடம்பெற்ற அவரது தலைசிறந்த தீர்ப்புகளை மாணவர்கள் வாசிக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் எந்தவொரு செயலிலும் மாணவர்கள் ஈடுபடக்கூடாது. சமூகத்தின் பலமே பெண்கள் தான் என மாணவர்கள் கருதினால் மட்டுமே சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் தலைவர் வி.ரகுபதி, உதவிப் பேராசிரியர் கெளகீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.