சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு சுருளி அருவியில் பக்தர்கள் சனிக்கிழமை துளசிமணி மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் டிச. 7 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை வரும் ஜனவரி 14 ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இந்த பூஜைகளில் கலந்து கொள்ள விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் சனிக்கிழமை அதிகாலையிலேயே சுருளி அருவிக்கு வந்தனர். அங்கு அருவியில் நீராடிய பின் அங்கு உள்ள ஐயப்ப சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில், மற்றும் அருவி வனப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் தங்களது குருநாதர் சுவாமிகள் மூலம் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஐயப்பசுவாமிக்கு அருவியில் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இதனால் அதிகாலையிலிருந்தே சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் வனப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.இது குறித்து மூத்த ஐயப்ப பக்தர் பொன்.காட்சிக்கண்ணன் கூறியது:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் அதிகமாக செல்வார்கள், காரணம் உச்ச நீதி மன்ற தீர்ப்பு எதிரொலியாக, பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.