நிலக்கோட்டை பகுதியில் 40 ஆயிரம் வாழைகள் சேதம்: ஏக்கருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கஜா புயல் காரணமாக, நிலக்கோட்டை பகுதியில் சுமார் 40 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதை அடுத்து, ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

கஜா புயல் காரணமாக, நிலக்கோட்டை பகுதியில் சுமார் 40 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதை அடுத்து, ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, சொக்கலிங்கபுரம், சொக்குபிள்ளைப்பட்டி, அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை கரையோர பாசன விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் ரஸ்தாலி, செவ்வாழை, முப்பட்டை, நாடு, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டிருந்தன.
ஒரு மாதத்தில் காய்கள் வெட்டும் பருவத்தில் இருந்த வாழைகள், கடந்த வெள்ளிக்கிழமை கஜா புயல் காரணமாக சேதமடைந்தன. நிலக்கோட்டை பகுதியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேபோல், வத்தலகுண்டு, கணவாய்ப்பட்டி, தெப்பத்துப்பட்டி பகுதிகளிலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், நல்ல வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக நிலக்கோட்டை விவசாயிகள் சங்க செயலர் காசிமாயன் கூறியது:
நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கஜா புயல் முழுமையாக புரட்டிப் போட்டுள்ளது. அதேபோல், இந்தப் பகுதியிலுள்ள நெற் பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. சேதமடைந்த பகுதியில் சில இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களும், பல இடங்களில் கிராம நிர்வாக உதவியாளர்களும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். சேத விவரங்கள் முழுமையாக கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக, வாழை மரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com