கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி, திண்டுக்கல் அருகே மர்ம நபர்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னுமாந்துறைப் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ரஃபேல் மகன் பாஸ்கரன் (32). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பகுதியில் ராம்குமார் என்ற ராம்கி என்பவரை கொலை செய்த வழக்கில், பாஸ்கரன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள தோமையார்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பாஸ்கரனை, 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன், உயிர் பிழைப்பதற்காக அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
ஆனாலும், அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பாஸ்கரனை வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது.
பலத்த காயமடைந்த பாஸ்கரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.