திண்டுக்கல் அருகே மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு கிரியம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பெரியசாமியின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் குழு, அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியது.
அப்போது அவரது கடையில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலைப் பொருள்கள் இல்லாததால் அக்குழுவினர், அந்த கடையின் பின்புறமுள்ள 11 வீடுகளில் சோதனை நடத்தினர். இதில், பெரியசாமிக்கு சொந்தமான வீடு மற்றும் மின் மோட்டார் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன்னுக்கும் கூடுதலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறியது: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 5 வகையான புகையிலைப் பொருள்கள் பெரியசாமியின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின், மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.