பழனியை அடுத்த கணக்கன்பட்டி பட்டிகுளம் நீர்ப்பிடிப்பு பகுதியை வீட்டுமனைகளாக மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 51 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பட்டிகுளம் மூலம் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், கிராமங்களுக்கு குடிநீராதாரமாகவும் திகழ்கிறது. இந்த 51 ஹெக்டேர் பரப்பில் வறட்சி காலங்களில் நீர் வற்றும் போது காய்ந்து கிடக்கும் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து கொள்வது வழக்கம். இதற்காக விவசாயிகளுக்கு நீர்ப்பிடி தீர்வை என்ற பெயரில் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டிகுளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியை வீட்டு மனைகளாக மாற்றி விற்க, சுமார் 20 அடி உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன், பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மயில்சாமி, துக்கையப்பன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை குளத்துப் பகுதியை நேரில் பார்வையிட்டனர். பின்னர், செல்லமுத்து கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் பொதுமக்கள், விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என்றார்.