வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வேடசந்தூரில் புதன்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
இங்குள்ள ஆத்துமேடு பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். செயலர் சி.பாலசந்திரபோஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் முபாரக் அலி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 29 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை நீர்த்துப் போகச் செய்யும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். பணியாளர் சீரமைப்புக்குழுவை கலைக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
போராட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சரண்குமார், மாவட்ட துணைச் செயலர் கே.ஆர்.பாலாஜி, துணைத் தலைவர் ஆர்.விஷ்ணுவர்தன், வேடசந்தூர் ஒன்றியச் செயலர் ஜி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.